புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி: 5-வது முறையாக முதல்வர் ஆகிறார் ரங்கசாமி!

முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி

படம்.எம்.சாம்ராஜ்

Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைகிறது. ஐந்தாவது முறையாக ரங்கசாமி முதல்வராகிறார். இக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி (லஜக) தலா ஒரு இடம் என 18 இடங்களை கைப்பற்றினர்.

ஐந்து இடங்களை வென்ற திமுக எதிர்க்கட்சியாகிறது. தவெக மற்றும் கூட்டணி கட்சிகள் 3 இடங்களை வென்றுள்ளன. புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவியது.

என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையே ஏற்பட்ட மோதலால் இக்கூட்டணியே குழப்பத்துடன் தேர்தலை சந்தித்தது. திமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அத்துடன் இடதுசாரிகள் தனித்து போட்டியிட்டனர். அவர்களும் பிரச்சாரம் செய்யவில்லை. விசிகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் காங்கிரஸ், இடதுசாரிகள் போட்டியிட்டனர். கடும் குழப்பத்துடன் இண்டியா கூட்டணி இத்தேர்தலை புதுச்சேரியில் சந்தித்தது.

ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 4) நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்தது.

புதுச்சேரியில் 4 பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை பனி காலை தொடங்கியது முதல் என்டிஏ கூட்டணியே முன்னிலை பெற்றது. என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 என 18 தொகுதிகளில் இக்கூட்டணி வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. என்டிஏ தலைவரான ரங்கசாமி மீண்டும் 5 வது முறையாக முதல்வராகிறார்.

திமுக 5 தொகுதிகள் வென்று எதிர்க்கட்சியாகிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. தவெக 2 இடங்களிலும், தவெக கூட்டணிக்கட்சி நேயன் மக்கள் கழகம் 1 தொகுதியிலும் வென்றுள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளனர். அதில் இருவர் என்டிஏ தரப்புக்கு நெருக்கமானவர்கள். அதனால் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது.

முதல்வர் ரங்கசாமி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்றுள்ளார். அதனால் தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜிநாமா செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்.ஆர்.காங்கிரஸை விட சரிந்த கட்சிகள்: கடந்த முறை 10 இடங்களை வென்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் இம்முறை 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை ஆறு இடங்களில் வென்ற பாஜக 4 இடங்களிலும், ஆறு இடங்களில் வென்ற திமுக 5 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. இரு இடங்களில் கடந்த முறை வென்ற காங்கிரஸ் இன்னும் சறுக்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.

கடந்த முறை அனைத்து இடங்களிலும் தோற்ற அதிமுக இம்முறை ஒரு இடத்தில் வென்றுள்ளது. புதிதாக போட்டியிட்ட தவெக இரு இடங்களிலும், லஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரங்கசாமி கூறியதுஎன்ன?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் வெற்றி சான்றிதழ்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“விஜய் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. புதுச்சேரியில் இரு தொகுதிகளில் தவெக வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில சிறப்பாக என்டிஏ அரசு ஆட்சி புரிந்தது. பல நலத் திட்டங்கள் செய்தோம். முதியோர், விதவைகளுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் செய்ததை தேர்தல் மூலம் அங்கீகரித்துள்ளனர். அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். நன்றியோடு வாக்களித்துள்ளனர்.

என்டிஏ அரசு அமைய தேவையான இடங்கள் தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. பிரதமர் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். மாநில அந்தஸ்தை தர தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. விஜய் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தமிழக மக்களுக்கு சிறந்த முறையில் விஜய் பணியாற்ற வேண்டும். எம்பி வைத்திலிங்கம் நான்காவது இடம் தள்ளப்பட்டதை கேட்கிறீர்கள். அவரை எம்பியாக்கி மக்கள் அனுப்பிய நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வந்திருக்கக் கூடாது. அதற்கு தகுந்த பாடம் தந்துள்ளனர்.

நிச்சயமாக இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும். பதவியேற்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>முதல்வர் ரங்கசாமி</p></div>
“திமுக இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்” - மு.க.ஸ்டாலின் | தேர்தல் முடிவுகள் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in