

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் உட்பட 4 பிராந்தியங்களிலுள்ள 3.47 லட்சம் ரேஷன்கார்டு தாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணைய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பாசிப் பருப்பு என ரூ.750 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். இந்த பரிசு தொகுப்பு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்த பரிசு தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ பாசிப் பருப்பு, 300 கிராம் பாண்லே நெய், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது. புதுவையில் உள்ள அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன்கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
இந்த பரிசுத் தொகுப்பு புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. காண்பெட் நிறுவனம் பரிசு தொகுப்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 2.63 லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கும், காரைக்காலில் 60,225 கார்டுகளுக்கும், மாஹேயில் 7981 கார்டுதாரர்களுக்கும், ஏனாமில் 15,498 ரேஷன்கார்டு தாரர்களும் என மொத்தம் 3.47 லட்சம் ரேஷன்கார்டு தாரர்களுக்கு தரப்படும்.
இதில் நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் இத்தொகுப்பு மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.