“திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்க நடவடிக்கை தேவை” - விஜய்

“திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்க நடவடிக்கை தேவை” - விஜய்
Updated on
1 min read

சென்னை: “திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் கடத்தப்பட்ட, பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை விரைவாக மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.

முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

“திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்க நடவடிக்கை தேவை” - விஜய்
“புதுச்சேரியில் என்டிஏ அரசு ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது!” - அமித் ஷா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in