

சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜம்புலிங்கம் சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.25.72 கோடியில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்து, அங்கு 15 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
மேலும், ரூ.17.47 கோடியில் ஜிகேஎம் குடியிருப்பு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி கட்டிடம், பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்தான் இருக்கிறார் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. எனது வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவிதான் இருக்கிறார்.
ஓராண்டு காலம் நான் மிசாவில் இருந்தபோது, அவர் கோபித்துக்கொண்டு ஏதாவது முடிவு எடுத்திருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும். பொறுமையாக இருந்து, எவ்வளவோ கொடுமைகள் எனக்கு வந்த நேரத்தில், என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தியதால்தான் இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். அதுபோலத்தான் ஒவ்வொருவரும். எனவே, மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்.
அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள். கி.ஆ.பெ.விசுவநாதம் கூறியதுபோல, மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் ஆகிய பதினாறும் பெற்று மணமக்கள் சிறப்போடு வாழவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
‘எதிரிக்கட்சித் தலைவர்’ - நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வழக்கம்போல இந்த விவகாரத்திலும் மாறுபட்ட கருத்துகளைத்தான் தெரிவித்துள்ளார். மடிக்கணினி விஷயத்தில் அவர் எதிரிக்கட்சித் தலைவராகவே செயல்படுகிறார்” என்று தெரிவித்தார்.