

கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. உடன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. படம்: ஜெ.மனோகரன்
பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக அரசு அநீதி இழைத்துள்ளது என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தொழில்துறையினர் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் மாற்றத்தை பார்க்கலாம். உலக நாடுகளில் 4-வது பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
வேலைவாய்ப்புக்கு விமான நிலையம் மிகவும் முக்கியம். ஆந்திர விமான நிலையங்கள் பெரிய அளவில் உள்ளன. ஆனால் கோவையில் விமான நிலைய பணி கிடப்பில் கிடக்கிறது. வரும் தேர்தலில் திமுக தோற்க வேண்டும். தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும்” என்றார்.சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அவருக்கு அங்கு கூடியிருந்த தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நிலையான வளர்ச்சியை பார்க்கிறோம். இரட்டை இன்ஜின் அரசாங்கம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கடந்த 30 ஆண்டுகளாக 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகிறோம். அதேபோல, தொகுதி மறுவரையறையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு தொகுதி எண்ணிக்கை உயரும்.
இதில் திமுகவுக்கு என்ன பிரச்சினை? தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் திமுக அரசு அநீதி இழைத்துள்ளது. நாட்டின் பெண்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி ஆட்சி இருக்கும் போது, கங்கை-காவிரி இணைப்பு சாத்தியம்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் வேட்பாளர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், கந்தசாமி, வானதி சீனிவாசன் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு சென்னை வந்தார். அண்ணாநகர், வில்லிவாக்கம், தியாகராய நகர் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கோகுல இந்திரா, எஸ்.ஆர் விஜயகுமார், சத்ய நாராயணன் ஆகியோரை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்தார்.