வானிலை முன்னறிவிப்பு: சேலம், ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: சேலம், ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 20) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

21-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

22-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 23 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 9 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் காக்குடி, சேலம் மாவட்டம் காவேரிபுரத்தில் தலா 8 செமீ, காரைக்காலில் 7 செமீ, சென்னை அயப்பாக்கம், வளசரவாக்கம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: சேலம், ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 18 பேர் பலி; 30+ படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in