“ரயில்வேயில் 29 ஆயிரம் பணியிட குறைப்பு முடிவை திரும்பப் பெற வேண்டும்”: செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

Updated on
1 min read

சென்னை: இந்திய ரயில்வேயில் சுமார் 29,608 பணியிடங்களை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய ரயில்வேயில் சுமார் 29, 608 பணியிடங்களை குறைக்கும் ஒன்றிய பாஜக அரசின் அராஜக போக்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்யும் ரயில்வே துறையில் இதுபோன்ற அறிவிப்புகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

மொத்தம் 14.8 லட்சம் பணியாளர்கள் கொண்ட ரயில்வே துறையில் சுமார் 2 சதவீதம் பணியிடங்களை, குறிப்பாக 'Non-Safety' பிரிவில், குறைக்கும் நடவடிக்கை மிகவும் வேதனையானது. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் மட்டும் 1906 பணியிடங்கள் பாதிக்கப்படுவது, தென் மாநில மக்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

வந்தே பாரத், அம்ரித் பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகம் செய்து வரும் சூழலில், பணியாளர்களை குறைப்பது ரயில்வே சேவையின் தரத்தையும், பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும். ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறை நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மீதமுள்ள ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரித்து, பணியாளர்கள் வழங்கும் சேவையின் தரம் குறையும் அபாயம் உள்ளது.

மேலும், இந்த முடிவு ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் தென்மாநில பயணிகளுக்கு செய்யும் அநீதியாகவே தெரிகின்றது. ரயில்வே துறையில் தனியார்மயமாக்கல் ஊக்குவிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இது பொதுத்துறையின் அடிப்படை நோக்கங்களுக்கே விரோதமானதாகும். எனவே, இந்த பணியிடக் குறைப்பு முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே, உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, ரயில்வே சேவையை சீராக்க ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>செல்வப்பெருந்தகை</p></div>
“குளு குளு ஊட்டி ஒரு கேடா என்றவர்கள் இவர்கள்” - முதல்வர் பயணம் குறித்து தமிழிசை காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in