

சென்னை: வங்கியில் கடன் பெற்று தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடிசெய்த விவகாரத்தில், தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
ஒடிசா புவனேஸ்வரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குப்தா பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், கனரா வங்கியில் சுமார் ரூ.1,109 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாக, சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
குறிப்பாக, கூடுதல் கடன் வசதிகளைப் பெறுவதற்காகத் தங்களது பங்குகளின் மதிப்பைச் செயற்கையாக மாற்றியமைத்தது. வர்த்தக வரவுகளை உண்மைக்கு மாறாக உயர்த்தி காட்டியது. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை போலியாகத் தயாரித்தது.
வங்கியில் பெற்ற கடன் நிதியை வேறு வழிகளில் மடைமாற்றம் செய்து முறைகேடாகப் பயன்படுத்தியது என தொடர் முறைகேடுகள் மூலம், கனரா வங்கிக்கு ரூ.1,109 கோடி அளவுக்குப் பெரும் நஷ்டத்தை அந்நிறுவனம் ஏற்படுத்தியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, புவனேஸ்வரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். அதன்படி, தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தராகண்ட் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள அந்நிறுவனம் தொடர்புடைய 6 முக்கிய இடங்களில் நேற்றுமுன்தினம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில், திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் உள்ள அந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, புவனேஸ்வரில் உள்ள அந்நிறுவனத்தின் 4 இயக்குநர்களின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள், கொல்கத்தாவில் உள்ள நிறுவனத்தின் பதிவு அலுவலகம், உத்தராகண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தக்கட்ட விசாரணையைச் சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது.