‘கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை’ - அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி

Updated on
2 min read

சென்னை: ‘கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் முறையே அப்பகுதியில் உள்ள ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச் சேர்ந்த வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இந்தக் கொலைகளை மறைப்பதற்காக அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அப்போது வனத்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது, வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் தேடி கர்நாடகம் மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர்.

மரியமங்கலம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ, இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்த சான்றுகளும் இல்லை. கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுவதிலும் உண்மையில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான புட்டரங்கா ஷெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது? என்று வினா எழுப்பியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களும் வனத்துறையினரின் செயலைக் கண்டித்துள்ளனர்.

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.

தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p><em>பாமக தலைவர் அன்புமணி</em></p></div>
“சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் பட்டியலில் இருந்து சாதியை தேர்ந்தெடுக்கும் முறையை கடைபிடிக்க வேண்டும்” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in