

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், 11 சார்பதிவாளர் அலுவலகங்களில் 64 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி, நிலம் மற்றும் இதர சொத்துகளைப் பதிவு செய்வதற்காகச் சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனிடையே பத்திரப் பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 62 முக்கியமான சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.37 லட்சத்து 75 ஆயிரம் 650 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 11 சார்பதிவாளர் அலுவலகங்களில் மொத்தமாக 64 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 சார்பதிவாளர்கள் மற்றும் 8 உதவியாளர்கள், அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வந்த தரகர்கள், தனிநபர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான சார்பதிவாளர்கள் உதவியாளர்களைப் பயன்படுத்தியே பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாக தெரியவந்துள்ளது.
திருவள்ளூரில் 8 பேர் மீதும், கடலூரில் ஒருவர் மீதும், செங்கல்பட்டில் 4 பேர், திருப்பத்தூரில் 6 பேர், கள்ளக்குறிச்சியில் 10 பேர், தூத்துக்குடியில் 6 பேர், கோவை தொண்டாமுத்தூரில் 5 பேர், கோவை காந்திபுரத்தில் 5 பேர், திருப்பூரில் 12 பேர், சேலத்தில் 3 பேர், கிருஷ்ணகிரியில் 4 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 சார்பதிவாளர் அலுவலகங்கள் தொடர்பான சோதனையில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற சார் பதிவாளர் அலுவலகங்களின் சோதனை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் வழக்கு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.