

தவெக பிரச்சார கூட்டத்தில் விஜய். படம்: எம்.சாம்ராஜ்
சென்னை: தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குறித்து, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணைய விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதி வாக்காளரான வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு ரூ. 115.13 கோடி என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ. 220.15 கோடி என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக, பெரம்பூர் தொகுதியில் கூடுதலாக விஜய் தரப்பில் திருத்தமனு அளிக்கப்பட்டுள்ளது. இது உண்மையை மறைத்ததற்கு சமம்.
எனவே, விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானதா, உண்மையானதா என்பது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும், இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.