

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. 2022-ல் 1.56 லட்சம் கனமீட்டர் குப்பையை தரம் பிரிக்க ரூ.10.60 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
ஆனால், ஒப்பந்த நிறுவனம் 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றிவிட்டு, ரூ.10.60 கோடி தொகையை பெற்றுக் கொண்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, குப்பைக் கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்டப் பணிகள் குறித்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து, இந்த விவகாரம் நடைபெற்றபோது மாநகராட்சி ஆணையராக இருந்த க.சரவணக்குமார், ஓய்வு பெற்றுள்ள செயற் பொறியாளர் ஜெகதீசன், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவிப் பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர் மணிசேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தனர். சரவணக்குமார் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக உள்ளார்.