

கோபாலபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி.
சென்னை: ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதன், கோபாலபுரம் பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுப்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி, அவ்வை சண்முகம் சாலையில் நிறைவு செய்தார்.
திமுகவின் கடந்த 5 ஆண்டு சாதனைகள், தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களை மக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி, கோபாலபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, அதிமுகவைச் சேர்ந்த மூத்த தொண்டரை நேரில் சந்தித்து, ஆசி பெற்றார்.
அப்போது அங்கிருந்த ஒருவர், அவ்வை சண்முகம் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவின் நுழைவுக் கட்டணம் அதிமுக ஆட்சியில் ரூ.50 ஆக இருந்தது. தற்போது ரூ.300 முதல் ரூ.400 வரை வசூலிக்கின்றனர்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன், பூங்காவின் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வளர்மதி உறுதியளித்தார்.
மேலும் கூறுகையில், ஆயிரம்விளக்கு தொகுதியில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தி தரப்படும் என்றார்.
நாம் தமிழர் வேட்பாளரும் திரைப்பட இயக்குநருமான மு.களஞ்சியம் கிரீம்ஸ் சாலையில் வாக்கு சேகரித்தார். காவலர் குடியிருப்பு, சுதந்திரா நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மையான குடிநீர், தரமான கல்வி, மருத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வாக்கு சேகரித்தார்.
இதுதவிர, தவெக வேட்பாளர் ஜேசிடி பிரபாகருக்கு ஆதரவாக கட்சி தலைவர் விஜய், நுங்கம்பாக்கத்தில் வாக்கு சேகரித்தார்.