

வானதி சீனிவாசன்
கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூரைபூர்வீகமாக கொண்ட வானதி சீனிவாசன், கடந்த 2021-ம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக பதவி வகித்து வந்தார். 6 ஆண்டுகள் ஆன நிலையில், நேற்று இப்பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டார்.
பதவி விடுவிப்பு, பாஜகவில் நடக்கும் வழக்கமான நடவடிக்கைதான் என அக்கட்சியின் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டாலும், அரசியல் காரணங்கள் பின்னணியில் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது, மத்திய அரசின் திட்டங்களை மகளிரிடம் சரியான முறையில் எடுத்துச் செல்லாதது போன்றவை இவரது மாற்றத்துக்கு காரணங்களாக இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இதுதொடர்பாக கோவை பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “பாஜகவில் ஒருவருக்கு கட்சிப் பதவி 3 ஆண்டுகள், அதிகபட்சம் 6 ஆண்டுகள் தான். அந்த காலக்கெடு முடிந்ததால் தான் தேசிய பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டார். மகளிர் அணி என்பது ஒரு சார்பு அணி தான் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு கட்சியில் வேறு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம்.
அதேபோல், தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற பேச்சுக்கள் உலவுகின்றன. புதிய தலைவர் பட்டியலில் அஸ்வத்தாமன், பேராசிரியர் சீனிவாசன், வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை மாநில தலைவர் பொறுப்பும் கூட அவருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன” என்றனர்.
6 ஆண்டுகளாக...
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் கூறும்போது, “நான் கடந்த 2021 முதல் 2026-ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் தேசிய மகளிரணி தலைவராக பதவி வகித்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் பாஜக தலைமை எனக்கு அளித்த அரசியல் ரீதியான அனைத்து பணிகளையும் திறம்பட நிறைவேற்றியுள்ளேன்.
தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்தது என்பது வழக்கமான நடைமுறைதான். என்னை பதவியில் இருந்து விடுவித்ததன் பின்னணியில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி உள்ளிட்ட எந்த அரசியல் காரணங்களும் இல்லை.
எனது உழைப்பையும், பணிகளையும் கட்சி நிச்சயம் பயன்படுத்தும் வகையில் வேறு பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். பொறுப்பு இல்லை என்றாலும், தொய்வின்றி எனது கட்சிப் பணி தொடரும்” என்றார்.