

சென்னை: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாக்காளர் படிவம்-6 என்பது புதிய வாக்காளர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கெனவே வாக்காளராக இருந்த ஒருவர், தனது பெயர் விடுபட்டதற்காக மீண்டும் இப்படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்கினால், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 31-ன்படி தவறான அறிவிப்பு செய்ததாக கருதப்பட்டு, தண்டனைக்குரிய குற்றமாக மாற வாய்ப்புள்ளது.
இதுகுறித்து டிச.20-ம் தேதி தேர்தல் ஆணைய பார்வையாளர் முன்னிலையில் முறையிட்டபோது, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் படிவம் 6 மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவும், எதிர்க்கட்சிகளின் விண்ணப்பங்கள் திட்டமிட்டு தவிர்க்கப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
எனவே 2025 வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் எந்த படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த குழப்பத்தால் தகுதியுள்ள வாக்காளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.