

தஞ்சாவூர்: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து, தஞ்சாவூரில் பாஜக சார்பில் ஆக.1-ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக அரசு மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அப்படி அணை கட்டினால், டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை கண்டித்தும், தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியில் உள்ள தவெக அரசு, மேகேதாட்டு அணை தொடர்பான கோரிக்கைகளை வலிமையாக கட்டமைக்க தவறியதை கண்டித்தும் தஞ்சாவூரில் பாஜக சார்பில் ஆக.1-ம் தேதி பேரணியும், கண்டன பொதுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது.
அதேபோல, வறட்சியால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிபடி விவசாயிகளின் அனைத்து கூட்டுறவு கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உடன் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் பி.ஜெய்சதீஷ், வடக்கு மாவட்ட அமைப்பாளர் பூண்டி வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.