

தமிழக பாஜக தலைமை அலுவலகம்
சென்னை: மின்துறையின் மிகப் பெரும் திட்டமான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது முறையற்றது என கண்டித்துள்ள பாஜக, இந்த திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் "திறன் அளவி" (Smart Meters) திட்டத்தை கைவிடுவதாக தவெக அரசு முடிவெடுத்துள்ளது என்று வருகிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் மின்துறையில் செயல்பட்டு வரும் மிகப்பெரும் சீர்திருத்தமான இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுவது என்பது மிகப்பெரும் தவறு என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும். மிகப்பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தை மேலும் பெரும் நஷ்டத்தில் மூழ்க வைத்து விடும் அபாயம் உள்ளது.
இணைப்புகளிலும் மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் (RDSS) கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை செயல்படுத்துவது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு துல்லியமான கணக்கை எடுத்து கட்டணத்தை உறுதி செய்யும் இந்த திட்டத்தால் மக்களுக்கு பெரும் பயன் விளைவதோடு, அரசின் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்புகள் சரிசெய்யப்படுவதோடு மின்பகிர்மான கழகத்தின் வருவாயையும் சீராக உயர்த்தும்.
இந்த திட்டத்திற்கு ஒரே நேரத்தில் பெரும் முதலீடு தேவைப்படுவதாக அரசு சொல்வது உண்மைக்கு புறம்பானது. முழுக்க முழுக்க மத்திய அரசு நிறுவனங்களின் கடனுதவியோடு, மத்திய அரசின் சலுகைகளோடு, தனியாரின் மூலதனத்தோடு உறுதியான கட்டமைப்பை உருவாக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் எதிர்காலதிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குறைபாடுகளே இல்லாமால் நிர்வாகத்தின் இழப்பை சரிசெய்து, மக்களின் தேவைக்கான தரத்தை உறுதி செய்யும் இந்த திட்டத்தை இரு ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய திராவிட முன்னேற்ற கழக அரசு அரசியல் காரணங்களுக்காக தள்ளிப் போட்டதோடு, தங்களுக்கு தேவையான 'வரவு(லஞ்சம்) இந்த திட்டத்தில் ஒப்பந்தம் கோரிய நிறுவனத்தால் மறுக்கப்பட்டதால் இந்த திட்டத்தின் செலவு அதிகமாக உள்ளது என்று அறிவித்து ஒட்டு மொத்தமாக கிடப்பில் போட்டது. அதே வழியில் இன்றைய தவெக அரசும் பயணித்தால் அது பெரும் பிழையாகி விடும் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்
இந்த திட்டத்தை கைவிட்டால், இழப்பை குறைக்கும் நடவடிக்கைகளுக்காக (Loss Reduction) பல்வேறு திட்டங்களின் மூலமாக மத்திய அரசு அளித்து வரும் ரூபாய் 5,000 கோடி அளவிலான நிதிச் சலுகை மற்றும் மானியம் தமிழகத்திற்கு கிடைக்காமல் போய் விடும் என்பதை தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் உரிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து, உணர்ந்து கொண்டு பேச வேண்டும்.
எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதும், செயல்படுவதும் தமிழகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதோடு மாநிலத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதை முதல்வரும், துறை அமைச்சரும் ஆராய வேண்டும்.
மின்துறையின் மிகப் பெரும் திட்டமான ஸ்மார்ட் மீட்டர் கிட்டத்தை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது முறையற்றது என்பதை தமிழக அரசு உணர்ந்து உடனடியாக இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.