

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களுக்கு சில விதிகளில் அரசு தளர்வு அளித்து அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ள அதே கட்டிடத்தில் மட்டுமே பார் செயல்பட இதுவரை அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மேலும், பாருக்கான டெண்டர் எடுப்பவர்கள் அந்த கட்டிட உரிமையாளரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று, அதை டாஸ்மாக் நிர்வாகத்திடம் சமர்ப்பித்து வந்தனர்.
இதனால், குறிப்பிட்ட கட்டிடஉரிமையாளரின் ஒப்புதலைப் பெறுபவர்களுக்கு மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய விதிகளின்படி சில தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசிதழில் கூறியிருப்பதாவது: மதுபான பார்களை இனி டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடையின் வளாகத்துக்குள் மட்டுமே அமைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இனி இல்லை.
அதற்கு பதிலாக, கடையின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். மேலும், ஒரு பாருக்கு தேவையான குறைந்தபட்ச பரப்பளவாக 15 சதுர மீட்டர் இருந்த நிலையில் அது 20 சதுர மீட்டராக (சுமார் 205 சதுர அடி) மாற்றப்படுகிறது. இதன்மூலம் பார் டெண்டர் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.