

சென்னை: சனாதனத்தை சாதிக்குள் அடைக்க முயற்சி நடப்பதாக தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட இந்தியாவில் சனாதனம் என்றால் இந்து. தென் இந்தியாவில் சனாதனம் என்றால் சமத்துவமின்மை என்கிறார் தவெகவின் ஆதவ் அர்ஜுனா. அவர் இப்படி சொல்லியிருப்பது அவரது அறியாமையால் அல்ல. இந்து மதத்தின் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பினாலும், பிரிவினை மனப்பான்மையினாலும்தான். சாதி ஏற்றத்தாழ்வுகள் எல்லா மதத்திலும் உள்ளன. அவற்றை சீர்திருத்த வேண்டுமேயன்றி வெறுப்பை உமிழ்வது தவறு.
சமத்துவத்தை அறிய வேண்டுமெனில் ராமானுஜரை, பாரதியாரை, ராஜாஜியை படியுங்கள். அதைவிடுத்து உதயநிதி ஸ்டாலின் கூறியதை வேறு வார்த்தைகளில் திரும்பக்கூறி சாதிப் பிளவுகளை, பிரிவினையை பேசுகிறீர்கள் என்பதே உண்மை. சனாதனம் என்பது தமிழகத்தின் ஆன்மா என்பதை அறிந்து கொள்ளுங்கள். வேதம், உபநிதம், திருக்குறள், தேவாரம், திவ்யப்பிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் அனைத்துமே சனாதனத்தின் அங்கம்.
காஞ்சி, ராமேசுவரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருப்பதி இவை அனைத்துமே சனாதனத்தின் உயிர் நாடி. இந்துத்துவாவை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இந்துக்களை எதிர்க்கிறீர்கள், பழிக்கிறீர்கள், அவமானப்படுத்துகிறீர்கள். 90 சதவீத தமிழர்கள் பின்பற்றும் இந்து மதத்தை, சனாதனத்தை சாதிக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள். சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது. உங்கள் இந்து விரோத அரசியல்தான் ஒழிந்துபோகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.