

சென்னை: திராவிட மாடல் அரசு ஆங்கிலத்தை திணிக்கிறது என்றும், பிரதமர் மோடியின் ஆட்சி தமிழ் மொழியை திணிக்கும் ஆட்சி என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.
இந்து மக்கள் கட்சி சார்பில், தமிழ் தமிழர் தமிழகம் மீட்பு மாநாடு ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். ஆதீனங்கள், ஆன்மிக பேச்சாளர்கள் என திரளானவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், அர்ஜுன் சம்பத் பேசியதாவது: தென் மாவட்டங்களில் வளர்ச்சிக்கு சில மதத்தினர் தடையாக இருக்கிறார்கள். கன்னியாகுமரி குளச்சல் துறைமுகத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
யாரையும் மத அடிப்படையில் நாங்கள் குற்றம் சாட்டவில்லை. எல்லோருமே ஆன்மிகத்தை வளர்க்கிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர்களின் மத நிறுவனங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள்.
அரசு நிர்வாகம், அரசியல், நீதித் துறையில் தலையிடுகிறார்கள். இதெல்லாம் அபாயகரமான போக்கு. இது தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில், சென்னை, பூங்கா நகர் ரயில் நிலையத்தில்
இந்தி எழுத்தை தார் பூசி அழித்துவிட்டால், இந்தியை அழித்து விடலாம் என நினைக்கிறார்கள். இந்தியை அழித்துவிட்டால் தமிழ் வளர்ந்துவிடும் என நினைக்கும் அவர்கள் ஆபத்தானவர்கள்.
திராட மாடல் அரசை சார்ந்தவர்கள் ஆங்கிலத்தை திணித்து தமிழ் மொழியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி ஆட்சி தமிழ் மொழியை திணிக்க கூடிய ஆட்சி.கோயில் வளாகங்களுக்கு உள்ளே அறநிலையத்துறை அலுவலகங்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.