

மதுரை: திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், தவெக ஆட்சியை காப்பாற்ற ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்களையும் சேர்த்து ‘எங்கள் கூட்டணிக் கட்சிகள் சார்பில் எங்களுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது’ என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சிடிஆர் நிர்மல் குமார் இன்று முதல் முறையாக மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தவெகவினர் வரவேற்பு அளித்தனர். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு நாளும் முதல்வர் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். உறுதியாக மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அவற்றை 100 சதவீதம் நிறைவேற்றுவோம். 140 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபித்துவிட்டோம். இதற்கு மேல் என்ன வேண்டும்.
எங்கள் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 120 பேருக்கான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். இந்த ஆதரவில்லாமல் மேலும் பல எம்எல்ஏ-க்கள், மக்கள் தீர்ப்பை மதித்து எங்களுக்கு வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் அளித்த தீர்ப்பை யாரும் எதுவும் செய்துவிடமுடியாது.
மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக விற்கப்படுவது தடுக்கப்படும். நீட் தேர்வு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களால் ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் நோக்கமாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட்கள், விசிக கட்சிகள் தற்போது வரை திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், ஆட்சியை காப்பாற்றவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்களையும் சேர்த்து எங்கள் கூட்டணி கட்சிகள் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருப்பது, திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பழனிசாமியை ஏன் முதல்வர் சந்திக்கவில்லை?
அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் மேலும் கூறுகையில், “ஸ்டாலினும், அதிமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தனது கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இவர்களெல்லாம் ரகசியமாக பல சந்திப்புகளை நடத்தியுள்ளனர். அதற்குப் பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காததால், ஒரு கள்ளக் கூட்டணி முடிவுக்கு வந்தது. முதல்வர் விஜய், அதிமுகவில் சில தலைவர்கள் தன்னை பார்க்க விரும்பியதால் அவர்களைச் சந்தித்தார். இதில் எந்தத் தவறு இல்லை” என்றார்.
பழனிசாமியை விஜய் சந்திக்காதது பற்றி கேள்வி எழுப்பியதுபோது, “ஒரு சில பேரை ஒரு சில நேரங்களில் சந்தித்தால் அது சரியாக இருக்காது. ஏனென்றால் சில அரசியல் சூழ்நிலையில், ஒரு சிலரை சந்தித்தால் மக்களுக்கு எதிராக இருக்கும். அதனால், அது சரியாக இருக்காது என்பதால்தான் அந்த சந்திப்பு நடக்கவில்லை” என்றார் அமைச்சர் நிர்மல் குமார்.