

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, சென்னையில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆக.16-ம் தேதி பிரம்மாண்ட நடைபயணம் நடைபெற உள்ளது.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பில் இதுவரை 19.32 லட்சம் பேர் இணைந்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் இந்த இயக்கம் நேரடியாகக் களமிறங்கும் என்று அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்காக கோவையில் பிரத்யேக பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, வேட்பாளர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தேர்தலுக்கு முன்னதாக மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கவும், அவர்களது அன்றாடப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து ஆதரவைத் திரட்டவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றினார்.
இந்நிலையில், அடுத்த மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுக்க ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக, ஆக.2-ம் தேதி கன்னியாகுமரியில் தூய்மைப் பணியை அண்ணாமலை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, ஆக.16-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட நடைபயணம் மேற்கொள்கிறார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இந்த நிகழ்ச்சியை நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குவதற்கு முன்பு, மக்களின் ஆதரவைப் பெறுவதே எங்களின் முதன்மை இலக்கு. அதற்காகவே மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்து வருகிறோம்.
உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை தொட்டவுடன், இது முழுமையான அரசியல் கட்சியாக மாறும் என்று அண்ணாமலை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒருவேளை, உள்ளாட்சித் தேர்தலுக்குள் அந்த இலக்கை எட்ட முடியாவிட்டால், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பெயரிலேயே தேர்தலைச்சந்திப்போம். அடுத்த 6 மாதங்களுக்குள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’’ என்றார்.