

‘வி த லீடர்ஸ்’ இயக்கம் தொடங்கிய பிறகு நேற்று முதன்முறையாக கோவை வந்த அண்ணாமலைக்கு, அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர்.
கோவை: ஜென்ஸீ தலைமுறைக்கு எல்லா டேட்டாவும் எளிதாக கிடைக்கும் நிலையில், சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அண்ணாமலை பேசினார்.
கோவையில் தனியார் கல்வி குழும கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா, கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் முதன்மை பணியாளர் அண்ணாமலை கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: ‘டைம்’ என்ற ஆங்கில பத்திரிகை முக்கிய நபர்களை அட்டைப்படமாக வெளியிடும். 1982-ல் அந்த புத்தகம் கம்யூட்டர் படத்தை போட்டது. இது நமது வாழ்க்கை முறையை மாற்றப்போகிறது எனத் தெரிவித்தது.
அந்தப் புத்தகம் 2025-ல் ஏஐ துறையில் இருக்கும் 7 நபர்களின் படங்களை போட்டு அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஏஐதான் எனத் தெரிவித்தது. ஏஐ நம்மை அழிக்க முடியாது. ஆனால் ஏஐ தெரியாத மாணவர்களுக்கு அது பிரச்சினையாக முடியும். மாணவர்கள் தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களில் 51 சதவீதம் பேர் கல்லூரிக்குள் நுழைகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ தொடர்பான பெயர்களை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். இதேபோல, உலகத்தை மாற்றும் நபர்களில் உங்கள் பெயர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சிறியதாக எதையும் நினைக்கக் கூடாது, பெரியதாக கனவு காண வேண்டும். ரிஸ்க் எடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
ஜென்ஸீ தலைமுறைக்கு எல்லா டேட்டாவும் எளிதாக கிடைக்கிறது. ஆனால், முடிவுகளை எடுப்பதில்லை. சரியான முடிவுகளை அடுத்து வரும் ஆண்டுகளில் எடுக்க வேண்டும். 10 ஆண்டுகளில் திரும்பிப் பார்த்தால் உங்களுடன் படித்த 10 சதவீத கல்லூரி மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள். உங்களுக்கு நிர்வாக பொறுப்புகள் வரும், போகும். அதை எப்போதும் மனதில் வைக்காதீர்கள். தொடர்ந்து படித்துக்கொண்டே இருங்கள். இது ஒரு மைல் கல் மட்டுமே. நிறைய மைல் கல்களை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உற்சாக வரவேற்பு: முன்னதாக இயக்கம் தொடங்கியபிறகு நேற்று முதன்முறையாக கோவை வந்த அண்ணாமலைக்கு, அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர். பூங்கொத்துகள் கொடுத்தும், சால்வை அணிவித்தும், கோஷங்களை எழுப்பியும் வரவேற்றனர். பின்னர், காளப்பட்டியில் உள்ள வீட்டில் இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.