

படம்: எல். பாலச்சந்தர்
ராமேசுவரம்: “இந்தியாவில் விண்வெளி அறிவியல் வளர்ந்துள்ளதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவர் விட்டுச் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம்” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 11-வது நினைவு தினத்தை முன்னிட்டு டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பாக ராமேசுவரத்தில் உள்ள கோ சுவாமி அரங்கில் அப்துல் கலாம் நினைவு கருத்தரங்கம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
கருத்தரங்கில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், நசிமா மரைக்காயர், பேரன் சேக் சலிம், சேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் ஐபிஎஸ், உயிரியல் விஞ்ஞானி சுல்தான் அஹமது இஸ்மாயில், மருத்துவர்கள் விஜய ராகவன், ஜோசப் ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது: “சுவாமி விவேகானந்தர் தனது அமெரிக்கா பயணத்தை முடித்து விட்டு இலங்கை வழியாக பாம்பன் குந்துக்காலுக்கு வந்தார். அப்போதைய ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவரை வரவேற்றார். அந்த இடத்தில் விவேகானந்தர் நினைவு இல்லத்தை கட்டுவதற்காக மண்டபம் மரைக்காயர்கள் 5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்கள்.
இந்தியாவில் ராமேசுவரத்திலிருந்து ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, தனது வாழ்க்கையை நாளிதழ்கள் விநியோகம் செய்யும் பையனாக ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக உயர்ந்த மாமனிதர் தலைவர் அப்துல் கலாம்.
எட்டு பிரதமருடன் பணியாற்றிய அனுபவம் டாக்டர் அப்துல் கலாமுக்கு இருக்கிறது. இன்று தனியார் அமைப்பு கூட செயற்றை கோளை விண்ணில் செலுத்த முடியும் என்கிற அளவுக்கு இந்தியாவில் விண்வெளி அறிவியல் வளர்ந்துள்ளது. இதற்கு காரணமான முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். தேசப்பற்றை எப்போதும் விடாமல், கடைசி வரையிலும் சிறந்த குடிமகனாக இந்த நாட்டுக்கு இருக்க வேண்டும், என்பதற்காக முன்னுதாரமாக திகழ்ந்தவர்க அப்துல் கலாம்.
அப்துல் கலாமின் உயிர் பிரியும்போது 'ஷில்லாங்' மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தார் என்றால் ஆண்டவன், கலாம், மாணவர்கள் என மூவரும் அந்த தருணத்தில் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். 11-வது குடியரசுத் தலைராக பதவியேற்ற கலாம் ஒரு சூட்கேசுடன் தான் சென்றார். பதவி காலம் முடிந்ததும் அதே சூட்கேசுடன் தான் வெளியே வந்தார். அப்துல் கலாம் விட்டுச் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம்” என்று அண்ணாமலை பேசினார்.