

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
கோவை: செந்தில்பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் கரூரைச் சேர்ந்த 18 சுயேச்சை வேட்பாளர்கள் ஏன் போட்டியிட வேண்டும் என அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம் வராததற்கு தமிழக அரசு அளித்த வரைவு அறிக்கைதான் காரணம்.
40 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் படிக்க முடியும். தவறான செய்தி பரப்ப வேண்டாம். செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களாக கரூரைச் சேர்ந்த 18 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் மூலம் ஏஜெண்டுகளை போட்டுக் கொள்ளலாம். பொருட்களை இலவசமாக வழங்கலாம். வேட்பாளர் என்ற பெயரில் சுயேச்சைகளை களம் இறக்கி இங்கிருக்கும் அமைதியை சீர்குலைக்கின்றனர். கோவை தெற்கு தொகுதியை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிப்போம்.
கோவை தெற்கு தொகுதியில் திமுகவினரே செந்தில் பாலாஜியை தோற்கடிப்பார்கள். செந்தில்பாலாஜி சகோதரர் அசோக், மாற்று வேட்பாளராக கரூரில் போட்டியிடுகிறார். கோவைக்கு பாஜக எதுவும் செய்யவில்லை என முதல்வர் வந்தபோது சொல்கிறார்.
ஆனால் ரூ. 2,250 கோடியில் விமான நிலைய விரிவாக்கம், கோவை ரயில் நிலையம் சீரமைப்பு ரூ. 800 கோடி, கோவை போத்தனூர் ரயில் நிலைய மேம்பாடு ரூ.224 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ரூத் திட்டம், இஎஸ்ஐ, கோவை மாவட்டத்தில் 104 மலிவு விலை மருந்தகம் என பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார்.
வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனது வீடு இருக்கும் கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு, பூத் ஏஜெண்டாக வேலை பார்ப்பேன்.
இந்தத் தேர்தலில் எனக்கு கட்சி கொடுத்த வேலையை செய்வேன். பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் உட்பட கூட்டணியினர் அனைவரும் வெற்றி பெறவேண்டும். பிரதமர் வரும் 15-ம் தேதி பிரச்சாரத்துக்காக கன்னியாகுமரிக்கு வருகிறார்.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட சீட் கேட்கவில்லை என்பதே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.