

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர்கள் பயிற்சிக்காக 6,171 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் நியமன அறிவிக்கையில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுநர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.
வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் மூலம் தமிழகத்தில் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்க தெற்கு ரயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக தெற்கு ரயில்வே துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக்கொள்கின்றனர். தொழில் பழகுநர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ம் ஆண்டில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது.
அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழக இளைஞர்களின் தொழில் பழகுநர் வாய்ப்புகளை பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை தெற்கு ரயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை தெற்கு ரயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.