

திருச்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு திருச்சி வந்தார். பின்னர் அவர் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அங்கிருந்து கார் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற பாஜக மையக் குழுக் கூட்டத்தில்.
தமிழக அரசியல் நிலவரம், தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சார யுக்திகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக மேலிடப் பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்று (பிப்.14) காலை 10.30 மணிக்கு ஓட்டலில் இருந்து விமானம் நிலையம் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார்.
அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து புதுச்சேரி மாநில பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பி மாலை 5.30 மணிக்கு திருச்சி வருகை தரும் அமித் ஷா, திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.