

நாராயணசாமி
புதுச்சேரி: “அமித் ஷா தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டை நிருபிக்காவிட்டால் பதவி விலக வேண்டும். நான் எந்த விசாரணைக்கும் தயார்” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது: “காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக நாராயணசாமி இருந்தபோது ஊழலில் சிக்கியிருந்தாகவும் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் புரிந்ததாகவும், ஏடிஎம் மெஷின்போல் செயல்பட்டு காங்கிரஸ் தலைமைக்கு நிதி கொடுத்ததாக சராமரியாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மானியம் குறைந்த அளவில்தான் தந்தது. ஆண்டுக்கு ரூ.2200 கோடிதான் மத்திய அரசு தந்தது. இப்படியிருக்க, எப்படி ஊழல் நடந்திருக்க முடியும்? காங்கிரஸ் தலைமைக்கு ஏடிஎம் போல் நிதி கொடுத்தாக கூறியது அபாண்டமான குற்றச்சாட்டு. இதெற்கெல்லாம் அமித் ஷா ஆதாரத்தை காட்ட வேண்டும். அமித் ஷா தெரிவித்தது அப்பட்டமான பொய். அவர் பேசியது வேதனை தருகிறது.
யார் ஊழல் செய்தார்கள் - ஊழல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சி ஐந்தாண்டு காலம் நடக்கிறது. கடந்த 2021 தேர்தலில் பெஸ்ட் புதுச்சேரியாகும் என பிரதமர் மோடி பேசினார். அதுபோல் நடந்துள்ளதா - ஒரு தொழிற்சாலையாவது கொண்டு வந்தார்களா என கேள்வி எழுப்புகிறேன். ஐந்தாண்டு கால சாதனைகளை சொல்லிவிட்டு இனி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என மக்களிடம் சொல்லவேண்டும். எந்தச் சாதனையும் செய்யாததால் மக்களிடம் தங்கள் சாதனையைப் பற்றி அமித் ஷா பேசவில்லை.
போலி மருந்து வழக்கில் சிக்கியுள்ள பேரவைத் தலைவர் செல்வத்தையும், தனது சொத்துகளை காப்பாற்ற பாஜகவில் சேர்ந்த நமச்சிவாயத்தையும் வைத்துக் கொண்டு மேடையில் வைத்து அமித் ஷா இப்படி பேசியுள்ளார். அமித் ஷாவுக்கு சவால் விடுகிறேன். புதுச்சேரி அரசோ, சிபிஐ விசாரணையோ, அமலாக்கத் துறையோ, வருமானவரித் துறை விசாரணையோ எதற்கும் நான் தயார். ஊழல் குற்றச்சாட்டு ஒன்று நிருபித்தாலும் அரசியலை விட்டு விலக தயார் - நிருபிக்காவிட்டால் அமித் ஷா பதவி விலகவேண்டும்.
பிரதமருக்கு அடுத்த நிலையிலுள்ள அமித் ஷா, மூன்றாம்தர அரசியல்வாதியல்ல. தவறான தகவல்களை காங்கிரஸ் மீது சராமரியாக கூறியது கண்டிக்கத்தக்கது. எந்த விசாரணைக்கும் தயார். சனீஸ்வரபகவான் கோயில் பக்கத்திலேயே மேடையில் பொய் குற்றச்சாட்டை அமித் ஷா சொல்லியுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக 24 இடங்களை பெறுவோம் என கூறியுள்ளார் அமித் ஷா. ஆனால் 4 இடங்கள் கூட வெல்ல முடியாது” என்று அவர் பேசினார்.