

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்ற அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் ரெட்டி, அப்போலோ மருத்துவமனை செயல் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி ஆகியோர். உடன், மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளார்.
சென்னை: பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மயிலாப்பூர் மாட வீதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தொண்டர்கள் அவர் மீது மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் ஈரோட்டில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, சென்னை வந்த மத்திய உள்துறை அமித் ஷா, கிண்டி நட்சத்திர ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மாலை 6 மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதி, வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் 20 நிமிட தரிசனத்துக்கு பிறகு வெளியே வந்த அமித்ஷா, கிழக்கு மாட வீதியில் திறந்த வாகனத்தில் ‘ரோடு ஷோ’வை தொடங்கினார். மாட வீதிகளின் இருபுறமும் கூடியிருந்த பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், உற்சாக முழக்கமிட்டு மலர்களைத் தூவி அமித் ஷாவை வரவேற்றனர்.
பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்தபடி, தாமரை மற்றும் இரட்டை இலை சின்னங்களுக்கு வாக்கு சேகரித்தார். சித்திரைக்குளம், தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்கடேசா அக்ரஹாரம் சாலை சந்ததிப்பு வரை சுமார் ஒரு மணி நேரம் ரோடு ஷோ நடைபெற்றது.