

கோப்புப் படம்
இவிஎம், விவிபாட் இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தலைமைதேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) மாவட்ட அளவில் இருந்து தொகுதி வாரியாக இணைய குலுக்கல் முறையில் பிரிக்கும் பணி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரும் மார்ச் 23-ம் தேதி தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலரால் மேற்கொள்ளப்படும்.
இப்பணி நிறைவடைந்த பின்னர், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் பட்டியல்கள் மாவட்ட தலைமையிடங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் பகிரப்படும்.
இந்த இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படும். அவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்தந்த சட்டப்பேரவை தொகுதி காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்த பின்னர், அந்த இயந்திரங்கள் பட்டியல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனும் பகிரப்படும். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கைபேசி செயலி பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி காணொலி வழியாக நேற்று வழங்கப்பட்டது.
இந்த கைபேசி செயலியின் மூலம், வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பதிவு செய்வதற்கான வசதிகள் உள்ளது.
தேர்தல் நாளன்றும் மற்றும் தேர்தல் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவும், எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ அல்லது வேறு எந்த அமைப்போ அல்லது நபரோ, மாநில, மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் உள்ளடக்கத்தை முன்-சான்றொப்பம் பெறாமல், அச்சு ஊடகங்களில் எந்தவொரு அரசியல் விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது.
மாநிலத்தில் புழக்கத்தில் உள்ள அச்சு ஊடகங்களில், ஏப்.22, 23 தேதிகளில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடக்கூடாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.