

சென்னை: மின்வாரியத்தின் மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் முழு உண்மையை தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் மின்கட்டண சுமையை சுமந்து கொண்டிருக்கிறது.
ஆனால், அதே மின்வாரியத்தின் மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில், மக்களின் பணம் யாருடைய லாபத்துக்காக பயன்படுத்தப்பட்டது? என்ற கேள்விக்கு தமிழக அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டும்.
குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு ஏற்பட்ட இழப்பும் முழுமையாக மீட்கப்பட வேண்டும்.
எனவே, ரூ.397 கோடி குற்றச்சாட்டின் முழு உண்மையையும் தமிழக அரசே மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.