

திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வாக்குசேகரிக்கும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி.
ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக சார்பில் முன்னாள் அரக்கோணம் எம்.பி. கோ.அரி, நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரன், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சத்யகுமார் மற்றும் சுயேச்சைகள் என 13 பேர் போட்டியிடுகின்றனர்.
தேமுதிக - தேர்தல் அறிக்கை வாக்குறுதி பிரதானம்
தேமுதிக வேட்பாளரான கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் உற்சாகத்துடன் வலம் வரும் கிருஷ்ணமூர்த்தி, திமுகவின் சமூகநலத் திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் ஆகியவற்றை முன்வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குகள் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் கோ.அரி.
அதிமுக - நலதிட்டங்களை முன்வைத்து பிரச்சாரம்
அதிமுக வேட்பாளரான கோ.அரியை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகை கவுதமி ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக நிர்வாகிகளுடன் களமாடி வரும் அரி, சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் புழக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளையும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை விளக்கியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வயல் வெளிகளில் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரன்.
நாதக - உலகத்தரம் வாய்ந்த கல்வி, மருத்துவம் உறுதி
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சந்திரனை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். உலக தரம் வாய்ந்த மருத்துவம், கல்வி அனைவருக்கும் வழங்கப்படும்.
அரசு மதுபான கடைகள் மூடப்படும். ஆடு, மாடு மேய்த்தல் அரசு பணியாக மாற்றி அமைக்கப்படும். வெளிப்படையான நிர்வாகம் மூலம் ஊழல் தடுக்கப்படும் என பிரச்சாரம் செய்து வருகிறார்.
தவெக - அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு
தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் சத்யகுமார், பெரும்பாலும் வீடு வீடாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வரும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யகுமார்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு, போதைப்பொருள் தடுப்பு, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரைபிணையில்லா கடன் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து தீவிரமாக வாக்குசேகரித்து வருகிறார்.