

சென்னை: கரூரில் விதிகளை மீறி மனிதப் பட்டிகள் அமைக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: கரூரில் இதற்கு முன்பு 40 பட்டிகள் அமைத்து வைத்திருந்தனர். தற்போது 120-க்கும் அதிகமான மனிதப் பட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏசி வசதி ஏற்பாடு செய்து மக்களை அங்கு அழைத்து அமர வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.
ஒவ்வொரு வார்டுக்கும் ஒவ்வொரு ஷெட் அமைத்து செயல் படுத்துகின்றனர். இதை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. 50 ஆயிரம் நாற்காலிகள் ஏற்பாடு செய்து பட்டிகளுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
தினமும் காலையில் இருந்து மாலை வரை அவர்கள் அங்கு தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். 120 ஷெட்களையும் போட்டோ எடுத்து கொடுத்துள்ளோம். திடீர் சோதனை மேற்கொண்டபோது அதை திடீர் ஓட்டலாக மாற்றிவிட்டனர்.
ஒரு ஓட்டல் வைக்க வேண்டுமென்றால் அதற்கு முன்அனுமதி பெற வேண்டும். ஆனால் அப்படி எதுவும் பெறவில்லை. சட்டங்கள் வெறும் பேப்பரில் மட்டுமே உள்ளது. செயல்படுத்தப்படுவது இல்லை.
‘இது எங்கள் பட்டிதான்’ என்று செந்தில் பாலாஜி பேசும் பேட்டிகூட உள்ளது. கரூரில் திமுக ஆதரவு அதிகாரிகள் இன்னும் உள்ளனர். கரூரில் உள்ள அதிகாரிகளை மாற்ற வேண்டும். இதே நிலை நீடித்தால் கரூரில் ஒரு தலைபட்சமான தேர்தல்தான் நடக்கும். அளவுக்கு அதிகமான பணம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.