

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி
மேட்டூர்: எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி 6-வது முறையாக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் வாங்கியதை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 1989-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1996, 2006 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வி அடைந்தார். தற்போது, 8-வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல், திமுக சார்பில் காசி, நாதக வேட்பாளர் பிரியதர்ஷிணி போட்டியிட்டனர்.
இதனிடையே, தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், வேட்புமனு தாக்கலின் போது, முன்மொழிபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதற்கு 2 நாட்கள் முன்பு சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு அளித்த நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்பட்டன. மொத்தமாக 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, முதல் சுற்றில் இருந்து இறுதி சுற்று வரை அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இந்த தொகுதியில் தவெக தலைவர் விஜய் ஆதரவு அளித்த வேட்பாளர் பிரேம்குமார் 25 சுற்றுகளிலும் 2-ம் இடத்தை பிடித்தார். திமுக வேட்பாளர் காசி அனைத்து சுற்றிகளிலும் 3-ம் இடம் பிடித்தார்.
வாக்கு எண்ணிக்கை இறுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, எடப்பாடி தொகுதியில் அவர் 6-வது முறையாக வெற்றி பெற்றார். கடந்த 2021 தேர்தலின் போது 93,802 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் கூடுதலாக 4,308 வாக்குகள் அவர் பெற்றார்.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி 25 சுற்று முடிவில்
> அதிமுக (பழனிசாமி) 1,48,933
> தவெக ஆதரவு (பிரேம்குமார்) 50,823
> திமுக (காசி) - 44,011
> நாதக (பிரியதர்ஷினி) - 8,450
> நோட்டா 1,341
> தபால் வாக்கு நிராகரிப்பு - 227
> வெற்றி வாக்கு வித்தியாசம் - 98,110