

மேட்டூர்: ஸ்டாலின் எந்த ரூபத்தில் எந்த அவதாரம் எடுத்தாலும் அதிமுக முறியடிக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அவர் பேசியது: “ஸ்டாலின் எந்த ரூபத்தில் எந்த அவதாரம் எடுத்தாலும் அதிமுக முறியடிக்கும். தமிழகத்தில் பிறந்த ஒருவரான மூப்பனாரை பிரதமர் ஆவதை தடுத்தவர் கருணாநிதி.
அதிமுக ஆதரித்து அப்துல் கலாம் ஜனாதிபதியானார். ஆனால், 2-வது முறையாக அப்துல் கலாமை ஆதரிக்க முடியாது என திமுக தெரிவித்தது. பின்னர், அவர் போட்டியில் இருந்து விலகி விட்டார்.
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவரானார். அதிமுக ஆதரித்தது. ஆனால், திமுக எதிர்த்து வாக்களித்தது. நீங்கள் உண்மையான தமிழரா? தமிழன் என்று சொல்லி தமிழனை கொச்சைப்படுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சைரவையில் 15 ஆண்டு காலம் இடம் பெற்ற திமுக, எந்த நிதியும், திட்டத்தையும் பெற்று தரவில்லை. குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தனர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. வேட்டி கட்டி டெல்லி சென்றால் நம்மளை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.
பொய் பேசி ஆட்சிக்கு வர வேண்டும் என ஸ்டாலின் துடிக்கிறார். ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியை முடக்க ‘பி’ டீம் நபர்கள் முடக்க பார்த்தவர்கள், தற்போது எங்கே சேர்ந்துள்ளனர் என உங்களுக்கு தெரியும்.
திமுகவுக்கு இறந்தவர்கள்தான் வாக்களித்து வந்தனர். இதனை தடுத்து நிறுத்தியதால்தான் ஸ்டாலின் பயப்படுகிறார். திமுகவினர் இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் வாக்கை போட முடியாது. அரசு போடும் திட்டத்தை, அரசு ஊழியர்கள் கொண்டு தான் செயல்படுத்த முடியும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய திட்டத்தை செயல்படுத்தாமல், புதிய உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். திமுக படித்தவர்களையும், படிக்காதவர்களையும் ஏமாற்றுகின்றனர். எந்த அரசாங்கம் பாதுகாப்பானது என அரசு ஊழியர்கள் முடிவு செய்யுங்கள்” என்றார்.