

சென்னை: இந்தியாவில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி, நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுத்தல் என காசநோய் ஒழிப்புத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுப்பதுடன், தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், காசநோயை முற்றிலுமாக ஒழிக்க ஐசிஎம்ஆர் - தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்கத்தின்கீழ் உள்ள, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இணைந்து செயல்படும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குநர் நா.ஜெ.முத்துகுமார், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீநாத் சத்யநாராயணா ஆகியோர் கையெழுத்திட்டனர். பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மூலமாக காசநோய்க்கான மருத்துவ பரிசோதனைகள், மேம்பட்டபுதுமையான மருந்துகள், திறன்களை கட்டமைத்தல், ஊட்டச்சத்து வழங்கல் ஆகியவற்றில் இரு துறைகளின் நிபுணர்களும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.