

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்.
“அதிமுக தனித்துத் தான் ஆட்சி அமைக்கும். எனவே, அதுபற்றி திமுக கவலைப்பட வேண்டாம்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் திருச்சி பஞ்சப்பூரில் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் புதன் கிழமை நடைபெற உள்ளது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். திருச்சியில் நடக்கும் விழா தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கான விழாவாக இருக்கும். இதில் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவோம்.
மீண்டும் திமுக வெல்லும் என முதல்வர் கூறுகிறார். யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்கப் போவது தமிழக மக்கள் தான். 200 இடங்களுக்கு மேல் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம். திமுக அரசு வாக்கு வங்கி அரசியலை மட்டும் தான் செய்கிறது.
மத்திய அரசு, தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கியது. இப்போது 26 லட்சம் விவசாயிகள் தான் கணக்கில் உள்ளனர். மத்திய அரசின் நிதி மக்களுக்கு நேரடியாகச் சென்றால், அவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் திமுக அரசு, விவசாயிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் ரூ.15,704 கோடியில் 6 லட்சம் வீடுகள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டதில் 3 லட்சம் வீடுகளை முதல்வர் இன்னும் கட்டித்தரவில்லை.
திமுக ஆட்சி அமைந்ததும் ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என்றனர். ஆனால், இதுவரை கட்டவில்லை. அதிமுக தனித்துத் தான் ஆட்சி அமைக்கும். எனவே, அதுபற்றி திமுக கவலைப்பட வேண்டாம். எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் வரலாம். விஜய் எங்கள் கூட்டணிக்கு வருவது குறித்து கருத்துக் கூற முடியாது. விஜய் தங்களுடைய கட்சியின் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்திவிட்டு, கொள்கை எதிரி பாஜக என கூறட்டும். வெறும் கொள்கை என்கிற வார்த்தையை மட்டும் கூறுவதால் அதற்கு அர்த்தம் தெரியவில்லை.
இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். நான் காஸ் டீலர், உங்களுக்கு எங்கு சிலிண்டர் வேண்டுமோ நான் தருகிறேன். ஹோட்டல்களில் உணவுகளை குறைத்ததற்கும் காஸ் சிலிண்டர் சப்ளைக்கும் தொடர்பு இல்லை. ஹோட்டல்களில் உணவு இல்லை என எதிர்க்கட்சிக்காரர்கள் தான் எழுதி போட்டிருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.