

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லிக்கும் சென்னைக்குமாய் பறந்து பார்த்துவிட்டு இனி எதுவும் நடக்காது என்று தெரிந்து போனதால் தவெக-வில் தஞ்சம் புகுந்துவிட்டார். அடுத்ததாக ஓபிஎஸ்ஸும், “டிசம்பர் 15-ல் திருப்பு முனை முடிவை எடுப்பேன்” என திகில் கிளப்பிக் கொண்டிருக்கிறார். அடுத்தவரான தினகரனும் ஜனவரியில் கூட்டணி குறித்து முடிவு என முன்னோட்டம் விட்டிருக்கிறார்.
இவர்கள் மூவருமே இதுவரைக்கும் காத்திருந்தது பாஜக-வின் பதிலுக்காகத்தான். ஆனால், பழனிசாமியின் பிடிவாதத்தை மீறி பாஜக-வால் இவர்களுக்கு எந்தப் பிடிமானத்தையும் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் பயணப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
அதிமுக-வை தங்கள் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக முதலில் ஓபிஎஸ்ஸை வைத்து தர்மயுத்தம் நடத்த வைத்தது பாஜக. அடுத்ததாக, அண்மையில் செங்கோட்டையனை எதையோ சொல்லி சீவிவிட்டு பழனிசாமிக்கு எதிராக கெடுவிதிக்க வைத்தார்கள். ஆனால், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பழனிசாமி யிடம் பாஜக-வின் எந்தப் பாச்சாவும் பலிக்கவில்லை.
அதனால், இனிமேல் பாஜக-வை நம்பிக் கொண்டிருப்பதில் புண்ணியமில்லை என்ற முடிவுக்கு வந்த தினகரனும் ஓபிஎஸ்ஸும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகினார்கள். கடைசியாக தேவர் ஜெயந்தியின் போது இவர்களோடு ஒன்றாக வண்டி ஏறிய செங்கோட்டையனை அதையே காரணமாக வைத்து கட்சியைவிட்டு தந்திரமாக கட்டம்கட்டினார் பழனிசாமி.
அதேசமயம், தேவரை சாட்சியாக வைத்து ஒன்று சேர்ந்த இந்த மூவரும். ‘நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம் எங்களுக்கான வழியை நீங்கள் காட்டாவிட்டால் நாங்களாகவே சுயமாக முடிவெடுத்து எங்களுக்கான வழிகளைத் தேடிக் கொள்வோம்’ என்று பாஜக-வுக்கு சேதி சொன்னார்கள்.
இதனிடையே, இவர்களை தங்கள் கூட்டணிக்குள் ‘தனி ஏற்பாட்டுடன்’ கொண்டு வரும் திட்டம் குறித்து ஜி.கே.வாசனை பழனிசாமியின் வீட்டுக்கே அனுப்பி பேசச் சொன்னது பாஜக. அதற்கும் சேலத்திலிருந்து சரியான சிக்னல் கிடைக்காததால் மூவரும் அடுத்தகட்ட நகர்வுகளில் இறங்கிவிட்டார்கள். அதன் தொடக்கமே செங்கோட்டைன் தவெக-வில் இணைந்திருப்பது.
அடுத்ததாக, ‘டிசம்பர் 15’ என ஓபிஎஸ் விதித்திருக்கும் கெடுவும் பாஜக-வுக்கு வைக்கப்பட்ட கெடுதான். அதற்குள் எதுவும் நடக்கவில்லை என்றால், அதிமுக தொண்டர்கள் மீட்புக் ‘குழு’வை ‘கழகம்’ ஆக்கி என்டிஏ-வுக்கு எதிராகவே சென்றுவிடுவோம் என்பது தான் இதன் மூலம் பாஜக-வுக்கு ஓபிஎஸ் சொல்லி இருக்கும் சேதி என்கிறார்கள்.
அப்படியொரு முடிவுக்கு வரும் பட்சத்தில், தவெக அல்லது திமுக அணிக்குச் செல்லவும் ஓபிஎஸ் தயங்க மாட்டார் என்கிறார்கள். அதேசமயம், ஓபிஎஸ்ஸை முதலில் வழியனுப்பி வைத்துவிட்டு அதற்கு வரும் ரியாக் ஷன்களைப் பார்த்துவிட்டு அதற்கேற்ப முடிவுகளை எடுக்க தினகரனும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்.