

மதுரை: பயனாளிகளின் முந்தைய மருத்துவ வரலாற்றை நொடிகளில் அறிய ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண் உதவுகிறது. ஆயஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் ஆயூஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண்ணை (ஆபா ஐடி) பெற்று பயனாளிகள் பயனடையலாம்.
இது ஒரு 14 இலக்க தனித்துவமான டிஜிட்டல் சுகாதார அடையாள எண் ஆகும். இது மருத்துவ விவரங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமிக்கவும், நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக் கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுடன் எளிதாகப் பகிர்ந்துகொள்ளவும் உதவும்.
இந்த ‘ஆபா எண்’ மூலம் பயனாளிகளின் முந்தைய மருத்துவ பரிசோதனை முடிவுகள், மருந்துகள் மற்றும் மருத்துவரின் குறிப்புகள் ஆகியவற்றை மொபைலில் டிஜிட்டல் வடிவில் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக சேமிக்கலாம்.
அவசர சிகிச்சையின் போது, பயனாளியின் ஒப்புதலின் பேரில் முந்தைய மருத்துவ வரலாற்றை மருத்துவர்கள் எளிதாகப் பார்க்க முடியும். ஒவ்வொருமுறையும் மருத்துவமனைக்குச் செல்லும்போது பழைய காகித ஆவணங்களை எடுத்துச் செல்லும் சிரமம் தவிர்க்கப்படுகிறது.
இந்த கணக்குடன் மருத்துவக் காப்பீடு இணைக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச அல்லது மானிய சிகிச்சைகளை பெற இது வழிவகை செய்கிறது.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ் குமார் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் ஓடிபி மற்றும் பிற காரணங்களுக்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க ‘ஆபா ஐடி’ மிகவும் அவசியமானதாகும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ஒட்டப்பட்டுள்ள ஆபா ஐடி பெறுவதற்கான கியூஆர் கோடு.
இந்த சுகாதார கணக்கு எண்ணை ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிற சேவை மையங்கள் மூலமாகவோ எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த மருத்துவ
மனைக்கு வரும் பயனாளிகள், அவர்களது உதவியாளர்கள் தங்கள் மொபைல் போன் மூலம் இந்த ஐடியை உருவாக்க அனைத்து வார்டுகளின் வெளிப்புறங்களில் கியூஆர் குறியீடு ஒட்டப்பட்டுள்ளது.
அதனை பயன்படுத்தி தங்கள் ஆபா ஐடியை உருவாக்கலாம். இந்த ஐடி மூலம் நோயாளிகளின் விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவாகிவிடும். காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களையும் இதன் மூலம் எவ்வித தடையுமின்றி எளிதாக ஒருங்கிணைத்து பெற முடியும்.
அதேபோல், ஏதேனும் அவசரநிலை ஏற்படும்போது மட்டுமே காப்பீட்டுத் திட்ட அட்டை பற்றி பலரும் யோசிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல், நலமாக இருக்கும் போதே முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையில் தங்களது பெயரும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் விடுபடாமல் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அவசர காலத்தில் எவ்வித தாமதமும் இன்றி அனைத்து மருத்துவச் சிகிச்சைகளை இலவசமாகவும் விரைவாகவும் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.