“குழந்தைகளை பாதுகாக்க முடியாதது நாகரிக சமூகமே இல்லை” - கமல்ஹாசன் ஆவேசம்
சென்னை: ‘குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை’ என மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பதிவாகிவரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கமல்ஹாசன் எம்.பி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவு: “சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது.
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான், அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்!”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
