

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2 கோடியே 68 லட்சம் மாற்றுத் திறனாளிகள் நாட்டில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான கல்வி, உயர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இட ஒதுக்கிடு வழங்கியும் முறையாக கிடைக்கவில்லை.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை என கூறப்பட்டது.
எனவே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.