

கோப்புப்படம்
கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில் சேவை மாற்றத்தால், பயணிகள் நேற்று 9-வது நாளாக கடும் அவதிப்பட்டனர். தாம்பரத்தில் இருந்து எழும்பூர் நிலையத்தை அடைய சுமார் 2 மணி நேரமானதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக. 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடை மேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை செங்கல்பட்டு தடத்தில் பிப். 20 முதல் ஏப்.5ம் தேதி வரை 89 ரயில் சேவைகள் ரத்து மற்றும் இதர மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டு, எழும்பூர் ரயில் நிலைய 5, 6-வது நடைமேடைகள் வழியாக இயக்கப்படுகின்றன.
நடைமேடைகள் மாற்றப்பட்டதால், இரு மார்க்கத்திலும் மின்சார ரயில்கள் தாமதமாகின்றன. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, பயணிகள் சிரமத்தை குறைக்கும் வகையில், 20 கட்டணமில்லா சிறப்பு பேருந்துகள், 20 விரைவு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடற்கரை தாம்பரம் தடத்தில் ரயில் பயணிகளின் அவதி தொடர்கிறது. குறிப்பாக தாம்பரத்தில் இருந்து எழும்பூருக்கு மின்சார ரயிலில் வர 2 மணி நேரமாவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: தாம்பரத்தில் இருந்து வரும் மின்சார ரயில் மாம்பலம் வரை சீராக இயக்கப்பட்டது. கோடம்பாக்கம் ரயில் நிலையம். நுங்கம்பாக்கம் ஆகிய நிலையங்களில் தலா 30 நிமிடங்களும், சேத்துப்பட்டில் 45 நிமிடங்களும் நிறுத்தப்பட்டன. இதன் பிறகு, மின்சார ரயில் மெதுவாக ஊர்ந்து சென்று எழும்பூர் நிலையத்தை அடைகிறது. இதனால், தாம்பரத்தில் இருந்து எழும்பூர் வந்தடைய சுமார் 2 மணி நேரமாகிறது. ரயில்களைக் குறைத்து இயக்கினாலும். அந்த ரயில்களை சரியான நேரத்துக்கு இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "எழும்பூரில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கும் நேரங்களில், மின்சார ரயில் நிலையத்தை அடைவதில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணிகளின் சிரமத்தைக் குறைக்க, 20 விரைவு மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன" என்றனர்.
15 பெட்டிகளுடன் சிறப்பு ரயில்: இதற்கிடையே, பயணிகளின் சிரமத்தை குறைக்க, 15 பெட்டிகள் கொண்ட 10 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், இந்த ரயில்கள் தாம்பரம், மாம்பலம், கிண்டி எழும்பூர் ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 15 பெட்டிகள் கொண்ட 10 பயணிகள் சிறப்பு ரயில் நாளை முதல் நெரிசல் மிகுந்த காலை, மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது.