Published : 05 Oct 2017 10:40 AM
Last Updated : 05 Oct 2017 10:40 AM
கோவை செங்கத்துறையில் மதுக்கடையை நிரந்தரமாக மூடும் வரை வீடு திரும்ப மாட்டோம் எனக்கூறி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் வட்டத்துக்குட்பட்ட செங்கத்துறை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே 15 நாட்களுக்கு முன்பு அரசு மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தையடுத்து தற்காலிகமாக கடை மூடப்பட்டது. இதனிடையே மற்றொரு தரப்பு மதுக்கடை வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் மனு அளித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையேயான பிரச்சினையாக மாறும் சூழல் உருவானது.
ஏற்கெனவே சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால், செங்கத்துறையில் சுமுகமாக பிரச்சினையை முடிக்க போலீஸார் முயன்றனர். ஆனால், கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி, மதுக்கடை அகற்றப்படும் வரை வீடு திரும்ப மாட்டோம் என்ற முழக்கத்துடன் நேற்று பெண்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘மதுக்கடை வரப் போகிறது என்பதை அறிந்து ஒன்றரை மாதம் முன்பே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். அதை மீறி கடையை திறந்துவிட்டதால் எங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். 45 நாட்களுக்கு மட்டும் மதுக்கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள். ஒருவேளை அனுமதித்தால் பிறகு அக்கடையை அகற்ற முடியாது’ என்றனர்.
நேற்றிரவு வரை போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நவம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் தர முடிவு செய்யப்பட்டது.
மதுக்கடை ஆதரவாளர் பலி
இதனிடையே மதுக்கடை வேண்டுமென ஆட்சியரை சந்தித்து முறையிட்ட குழுவைச் சேர்ந்த ஆறுமுகம் (67) என்பவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக மது அருந்தாமல் இருந்தவரை, மதுக்கடைக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடுத்தி மது அருந்த வைத்துவிட்டனர். கிராமத்துக்குள் மதுக்கடை அமைந்தால் இதுபோன்ற பல உயிர்கள் பலியாக நேரிடும் என கூறுகின்றனர் கிராமப் பெண்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT