Published : 27 Oct 2017 09:58 AM
Last Updated : 27 Oct 2017 09:58 AM

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களுக்கு தமிழக அரசின் சிங்காரவேலர் விருது: நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் ‘சிங்காரவேலர் விருது’ பெற வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக வரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏராளமான விருதுகள், பரிசுகளை வழங்கி சிறப்பித்து வந்தார்.

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை மீட்டெடுத்து அரசு விழாவாக் கொண்டாட அவர் ஆணையிட்டார். கடந்த 19-7-2017 அன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை வெளியிட்ட முதல்வர், “தமிழில் அறிவியல் நூல் எழுதுபவர்கள், சமுதாய முன்னேற்றம், சமத்துவக் கொள்கை, தொழிலாளர் நலன் ஆகியோருக்காக போராடுபவர்களில் சிறந்த ஒருவருக்கு ‘சிங்காரவேலர் விருது’ வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ. 1. லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்” என அறிவித்தார்.

அதன்படி வரும் 2018 சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதாக ‘சிங்காரவேலர் விருது’ வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தன் விவரக் குறிப்பு, நிழற்படம் இரண்டு, எழுதிய நூல்களில் ஒரு பிரதியை அனுப்ப வேண்டும். நவம்பர் 30-ம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044 - 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்கள், tamilvalarchithurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x