

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே காரில் சென்ற நகை வியாபாரியை தாக்கி ரூ.1.5 கோடி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 கார்களில் பின்தொடர்ந்து வந்த முகமூடி கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் இஷாந்த் (40). திருநெல்வேலியில் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரும், 2 உதவியாளர்களும் திருநெல்வேலியிலிருந்து காரில் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரைக்கு நகைகள் வாங்க இன்று சென்றுகொண்டிருந்தனர். திருநெல்வேலி அருகே மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் இவரது காரை பின்னால் இரு கார்களில் வந்த முகமூடி திருடர்கள் வழிமறித்தனர். இதனால் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய இஷாந்த் மீது முகமூடி திருடர்கள் மிளகாய் பொடியை தூவியதுடன் கம்பியால் தாக்கியுள்ளது. இதனால் அவர் கத்தி கூச்சலிட்டார்.
காரின் கண்ணாடியை உடைத்து அதனுள் இருந்த ரூ.1.5 கோடி ரொக்கத்தை அந்த கும்பல் திருட முயன்றபோது அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்திலிருந்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் பேருந்தை நிறுத்தினர். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த கும்பல் இஷாந்தை தங்களது காரில் பலவந்தமாக ஏற்றியதுடன், அவரது காரையும் கடத்தி சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றதும், இஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி, நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றுள்ளனர். அங்குள்ள குளத்தின் கரையோரம் இஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பணக் கட்டுகளை தங்கள் காருக்கு மாற்றிவிட்டு தப்பியது.
இது குறித்த தகவலின்பேரில் நாங்குநேரி மற்றும் மூன்றடைப்பு போலீஸார் அங்கு வந்து இஷாந்திரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருடப்பட்ட பணம் குறித்து இஷாந்த் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸாருக்கு குழப்பம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவில் இந்த திருட்டு குறித்த முழு விவரமும் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, திருடப்பட்ட பணம் கருப்பு பணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து காணப்படும் தேசிய நெடுஞ்சாலையில் முகமூடி கும்பல் பகலில் காரை வழிமறித்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.