Published : 29 May 2023 05:14 AM
Last Updated : 29 May 2023 05:14 AM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் நிலவும்

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (மே 29) முதல் ஜூன் 1-ம் தேதிவரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 31-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும், ஜூன் 1-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 8 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 5 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x