

சென்னை: நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள என்விஎஸ்-1 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது .
இந்தியாவில் தரை, கடல், வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக, ரூ.1,420 கோடியில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி,1டி, 1இ, 1எப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் 2013 முதல்2016-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, முதலில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் 1-ஏ செயற்கைக்கோள் பழுதானது.அதற்கு மாற்றாக 2017-ல்ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால்,செயற்கைக்கோளை திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாததால், அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
அதன்பின் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ-வுக்கு மாற்றாக 1-ஐ செயற்கைக்கோள் 2018-ல் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அதேபோல, தற்போது ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இது ஜிஎஸ்எல்வி எஃப்-12ராக்கெட் மூலம் ஹரிகோட்டா வில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (மே 29) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட் டவுன் நேற்று காலை 7.12 மணிக்குத் தொடங்கியது.
அணு கடிகாரம்... என்விஎஸ்-1 செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை உடையது. அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முதல்முறையாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதரை, கடல், வான்வெளிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.