

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகளை தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர ஜூன் 13-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள்கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,771 பேருந்துகள் கொள் முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, பி எஸ் 6 வகை குளிர்சாதனமில்லா டீசல் பேருந்துகள்கொள்முதல் செய்யப்பட உள்ளன.
பேருந்துகளைத் தயாரித்து வழங்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் தகுதிபெற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே டெண்டருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இப்போது தீர்ப்பும் பெறப்பட்டுவிட்டது. எனவே, ஜூன் 13-ம் தேதிக்குள் டெண்டர் கோரலாம் என அறிவித்துள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு அரசின் வழிகாட்டுதல்படி பேருந்து கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.