Last Updated : 28 May, 2023 07:29 PM

 

Published : 28 May 2023 07:29 PM
Last Updated : 28 May 2023 07:29 PM

மேட்டூர் அரசு மீன் பண்ணையில் இருந்து கேரளாவிற்கு 15 லட்சம் மீன் குஞ்சுகள் அனுப்பி வைப்பு

மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்பு பண்ணையில் இருந்து கேரளாவுக்கு 15 லட்சம் நுண்மீன் குஞ்சுகள் அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேட்டூர்: மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்பு பண்ணையில் இருந்து கேரளாவிற்கு 15 லட்சம் நுண்மீன் குஞ்சுகள் அனுப்பி வைக்கப்பட்டதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்களின் வளத்தை பெருக்கிடும் பணியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப்படுகின்றன.

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்தின் மீன் வளத்துறைக்கும், அண்டை மாநிலத்திற்கும் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகிறது. தற்போது, முதற் கட்டமாக, கேரளாவுக்கு 15 லட்சம் நுண்மீன் குஞ்சுகளும், வேலூர் மாவட்டத்திற்கு 7.52 லட்சம் நுண்மீன், இளமீன் குஞ்சுகளும் மீன்வளத்துறை அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜீன், ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் இன முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும். கேரளாவில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய தேவையான வசதிகள் இல்லாததால் மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் இருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடைவெளியில் மீன்குஞ்சுகளை வாங்கிச் செல்கின்றனர். அதன்படி, கேரளாவுக்கு 15 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் நுண்மீன் குஞ்சுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல், வேலூர் மாவட்டத்திற்கு 6 லட்சம் நுண்மீன் குஞ்சுகள், 1.52 லட்சம் இளமீன் குஞ்சுகள் அனுப்பி வைக்கப்பட்டன'' என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x