போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 612 ஊழியர்களுக்கு ரூ.171 கோடி பணப் பலன்கள் - அமைச்சர் உதயநிதி வழங்கினார்

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 612 ஊழியர்களுக்கு ரூ.171 கோடி பணப் பலன்கள் - அமைச்சர் உதயநிதி வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: கடந்த ஆண்டில் ஓய்வுபெற்ற 612 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.171.23 கோடி பணப் பலன்களுக்கான காசோலையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, காலமான பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இதில், கடந்த 2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஓய்வுபெற்ற 612 பேருக்கு, ரூ.171.23 கோடி பணப் பலன்களுக்கான காசோலைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்று பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம். இத்திட்டத்தில் இதுவரை 288 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை கர்நாடக அரசும் அமல்படுத்தியுள்ளது. இத்தகைய திட்டம் வரவேற்பை பெற்றுள்ளதற்கு போக்குவரத்து கழக ஊழியர்கள்தான் காரணம்.

அவர்களது சிக்கல்கள், குறைகளை அரசு சரிசெய்து வருகிறது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, ‘‘நிதி நெருக்கடியில் இருக்கும் போக்குவரத்து துறைக்கு உயிர் கொடுக்கவே 2 ஆயிரம் பேருந்து வாங்க நிதி, ஊழியர் நியமனத்துக்கான உத்தரவு போன்றவற்றை முதல்வர் வழங்கியுள்ளார். எனவே, போக்குவரத்து கழகங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று சில தொழிற்சங்கத்தினர் கூறுவதை நம்ப வேண்டாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in